Sunday, May 31, 2009

அம்மா அப்பஞ் சுட்ட கதை

பாட்டி வடை சுட்ட கதை கேட்டிருப்பியள். அதென்ன அம்மா அப்பஞ் சுட்ட கதை எண்டு ஏதோ புதுசா கலியாணம் கட்டினவன் பொண்டாட்டியை அவசரப்படுத்தின மாதிரி அவசரப்படுத்தினா நான் சொல்லமாட்டன். கொஞ்சம் பொறுமையா இருக்கோணும்.

அப்பஞ் சுடுறதெண்டா என்ன சின்ன விசயமே. இப்பத்தை மாதிரி அப்ப மாவை ரெடிமேற்றா வாங்கி தண்ணியை விட்டுக் குழைச்சு அரை மணித்தியாலத்திலை அப்பஞ் சுடுற விளையாட்டில்லை பாருங்கோ இது. இப்பிடி அவசரத்திலை சுட்ட அப்பம் அப்பம் மாதிரியே இருக்கிறது. சவத்தை.

வீட்டிலை அபபஞ் சுடுறதெண்டா பெரிய ஆரவாரம் பாருங்கோ. அனேகமாய் மா இடிச்சு வறுக்கிற நாளுக்கு அடுத்தநாள் அப்பமாக தான் இருக்கும். மாவிடிச்ச குறுணியிலை இடிச்ச மாவிலை அப்பஞ்சுட்டா அதன் ரேஸ்டே தனிதான். மாவிடிக்க அரிசியை ஊறப்போட்ட உடனேயே எனக்கு நாக்கில தண்ணி வரத்தொடங்கியிடும். அம்மா நாளைக்கு அப்பமே? எண்டு கேட்டு கேட்டு குடுக்கிற நச்சரிப்பிலை அம்மா சொல்லும், ”மோனை அரியண்டப்படுத்தப்படாது. பேந்து என்னாலை வேலை செய்ய ஏலாது.”


அபபஞ் சுடுறதெண்டா எங்கடை பங்கும் அங்கை இருக்கும். என்ன பங்கு எண்டு கேட்கிறியளோ? அதுதான் இராசேந்திர மாமாவிட்டை போய் அப்பம் புளிக்க வைக்க கள்ளு வாங்கிறது. கள்ளு வாங்க கடைக்கு போகத் தேவையில்லை. எங்கடை சித்தி வீட்டிலேயே இரண்டு தென்னமரம் கள்ளுச் சீவ விட்டிருந்தது. ஒண்டு தெருக்கரை தென்னமரம். மற்றது கிணத்தடியான். இரண்டிலும் கள் இறக்க இராசேந்திரம் மாமா வரும். இராசேந்திரம் மாமாவின்ர உடம்பென்ன உடம்பு. சும்மா உருண்டு திரண்டு. பெசெப்ஸ் ரைசெப்ஸ் பெக் மேஜர் எண்டு உவங்கள் விழந்து விழுந்து பாடமாக்குற தசையெல்லாம் அங்கை உருண்டு திரண்டிருக்கும். உன்னி உன்னி மரம் ஏறேக்கை தசையள் செய்யுற திருவிளையாட்டுகளை கண்டா...எதுக்கு பிறகும் ஏன் ஜிம் அது இது எண்டு அலைவான் பேசாம மரம் ஏற பழகினாலே போதும் எண்டு நீங்கள் நினைப்பியள். ஆனா மரம் ஏறுறதும் சாதாரண வேலையில்லை. யாழ்ப்பாணத்திலை மரம் ஏற விடுறதும் சாதாரண வேலையில்லை.


சரி அது இருக்கட்டும். எவர் சிலவர் பேணியோட நான் கிணத்தடியிலை நிண்டா மாமாவுக்கு தெரியும். பெடியின்ர வீட்டிலை நாளைக்கு அப்பம் எண்டு. முட்டியிலை விழுந்திருந்த வண்டுகளை ஊதித் தள்ளிவிட்டு ஒரு அரைக்கப் கள் கிடைக்கும். கள்ளின்ர நாத்தமும் அதுக்குள்ள விழுந்திருக்கும் வண்டுகளும் எனக்கெண்டா அருவருப்புத்தான். அப்பமே சாப்பிடாம விட்டிருப்பன். அம்மாதான் சொல்லும் அப்பம் சுடேக்கை சூட்டிலை எல்லாக்கிருமியளும் செத்துப்போகும் எண்டு. என்க்கு அப்பம் நல்ல விருப்பம். அதாலை அதுக்க விடுற கள்ளைப் பற்றி நான் கவலைப் படுறதில்லை


.

சிவலிங்கத்தார்ற பெடிதான் பரமு. பரந்தாமன் எண்டு சிவலிங்கத்தார் தன்ர மூத்த பெடிக்கு பெயர் வைச்சிருந்தாலும் பரமு எண்டாத்தான் எங்களுக்குத் தெரியும். பரமு கொஞ்சம் குளப்படிதான. அவன்ர வீட்டிலை அவன்தான் அப்பத்துக்கு கள்ளு வாங்கிறது. அப்பத்துக்கு வாங்கின கள்ளிலை அரைவாசிதான் வீட்டைபோகும். மிச்ச அரைவாசியை பெடி மண்டீடும். சிலவேளை முழுக்க அடிச்சிட்டு வீட்டைபோய் கைதவறி கோப்பை விழுந்ததிலை கள்ளு முழுக்க சிந்திண்டு போச்செண்டும் சொல்லி இருக்கிறான்.



என்னெண்டு பிடிபட்டுதெண்டு தெரியேல்லை. ஒருவேளை இவன் ஒவ்வொருநாளும் அப்பத்துக்கெண்டு வாங்கினதிலை இராசேந்த்திரத்தாருக்கு சந்தேகம் வந்துதோ, அல்லது தாய் நேரை கண்டாவோ, அல்லது அவன்ர வாய் நாற்றம் காட்டிக்கொடுத்துதோ தெரியாது. அவன் பிடிபட்டுப் போனான்.

அவன் பிடிபட்ட நாளிலிருந்து என்னையும் கள்ளுக்கு அனுப்புறதில்லை. அப்பச்சோடா போடுறது அல்லது அம்மாவே கிணத்தடியில் கோப்பையை வைச்சிட்டு குசினியிக்கை இருந்துகொண்டே, இராசேந்ததிரம் உதுக்கை எப்பன் வார்த்துவிடும் எண்ணுவா. எங்கடை அம்மாவும் பரமனின்ர அப்பாவும் ஒண்டா படிப்பிச்சதாலை, பரமன் கள் அடிச்ச விசயம் எங்கடை அம்மாவுக்கும் கசிஞ்சிட்டுது போல. தன்ர பெடிக்கும் ஏன் விசப் பரீட்சை வைப்பான் எண்டுதான் உந்த ஏற்பாடு.

பிறகு நான் மேலை படிக்க கொழும்பு வந்திட்டன்.

பரமன் யாழ்ப்பாண யூனிவெஸ்டியிலைதான் படிச்சவன்.

அங்கை படிக்கேக்கையும் கம்பசுக்கு பின்னால இருக்கிற கடையிலை போத்திலிலை கள்ளு வாங்கினதாய்க் கேள்வி.

வீட்டிலை அப்பத்துக்கெண்டா எப்பன் கள்ளுக் காணும்
.இவன் போத்தில் நிறைய வாங்கிறவனாம்.
பெடியள் எல்லாருமாய்ச் சேந்து அண்டாவிலை புளிக்க வைச்சு கனக்க அப்பஞ் சுட்டாங்களோ தெரியாது.

Saturday, May 16, 2009

ஒரு அப்பாவியும் பயங்கர வாதியும்.

எங்கை உவன் போட்டான் எண்ட எங்கடை அப்பாவின்ர கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாம ஏதோ காணாமல் போனவர்கள் பற்றி பதில் சொல்லத்தெரியாம நிற்கிற மனித உரிமைகள் ஆணைக்குழு மாதிரி நிற்கிறது வேற யாருமில்லை ஸ்ரீமதி செல்வராணிதான். உது ஸ்ரீமதி செல்வராணிக்கு மட்டுமல்ல ஆம்பிளைப் பிள்ளையளை பெத்து அதுகள் ஏ எல் படிக்கிற வயதில இருந்தா எல்லா வீட்டையும் நடக்கிறதுதான். 

ஓ எல் படிக்கிற வரை பெடியன் தங்கக் கம்பியாக இருந்ததற்கு ஒரு காரணம் அவன் ஒரு ரியூசனுக்கும் போகாததாக கூட இருக்கலாம். அதுமட்டுமில்லாம சேர்ந்த பெடியளும் சும்மா பற்றரி ஈயத்தை உருக்கி சாம்பலிலை கரண்டு எடுக்கும் ஆராய்ச்சியிலிருந்த மோகனன் மற்றது சதுரங்கத்திலை இராணியை வெட்டிப்போட்டு ராசாவை கலைச்சு கலைச்சு துரத்துற பேக் கரன் எண்ட லெவலிலை இருந்ததாலை வீட்டுக்காரருக்கும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு. பெடியை காணவில்லை எண்டா அது ஒண்டிலை பள்ளிக்கூடத்திலை நிற்கும் அல்லது ஏதாவது ஆராய்ச்சி கோதாவிலை அறிவியல் கழகத்திலை நிற்கும்.

அப்பிடி இருந்த பெடி இப்பிடி மாறும் எண்டு அவையள் கனவிலும் நினைச்சிருக்க மாட்டினம். பெடி ஏ எல் இலை என்ன படிக்குது எந்த ரியுசனுக்கு போகுது எண்டதெல்லாம் இரண்டு மூண்டு மாதம் முடிஞ்ச பின்னர்தான் அதுகளுக்கு தெரியும் எண்டா என்னத்தை சொல்ல?

அதுவும் இப்ப முந்தின மாதிரி இல்லை. முந்தியெண்டா ஊரடங்கு எண்டு றேடியோவிலை சொன்னா பிலத்து சிரிச்சுபோட்டு வழமையான வேலையை பார்க்கிறதுதானே. யார் இருந்தவை ஊரடங்கை அமுல் படுத்த? இரவு பத்துமணிக்கு இணுவிலிலை பத்மலிங்கத்தாரின்ர பாட்டு கச்சேரியை கேட்டுப்போட்டு டைனமோ சைக்கிளிலை ஹம் பண்ணிக் கொண்டுவந்த காலமே இப்ப இருக்குது?? 1996 இலை ஏழு மணிக்குத்தான் கேபியூ எண்டாலும் ஆறுமணிக்கே ஊர் அடங்கியிடும். இதுக்குப்பிறகும் ஆரும் சைக்கிளிலை வாறதெண்டா அது அங்கொடை கேஸாயிருக்கும். அல்லது அது நாங்களாக இருக்கும்.

என்னதான் இருந்தாலும் வீட்டாலை வெளிக்கிடேக்கை எங்க போறன் எண்டு சொல்லிப்போட்டு வெளிக்கிடுறதில்லை. போகேக்கை எங்கை போறாய் எண்டு கேக்கக் கூடாதெண்ட சம்பிரதாயத்தை நாங்கள் நம்பாவிட்டாலும் அம்மா நம்பியதால் எங்கை போறாய் எண்ட கேள்வி எழுப்பப் படுவதும் இல்லை. துலைக்கே போறாயெண்டு ஒருமாதிரி தொண்டையை செருமிக்கொண்டு கேட்டாலும் ஒரு முறைப்புப் பார்வைதான் பதிலாய்க் கிடைக்கும். வீட்டாலை வெளிக்கிட்ட சைக்கிள் இடக்கைப் பக்கமாக போனால் யாழ்ப்பாணம் கோண்டாவில் நல்லூர் எண்டு கிழக்கு பக்கமாக உள்ள ஊர்களையும் வீட்டாலை வலப்பக்கமாக திரும்பினால் வட்டுக்கோட்டை மானிப்பாய் ஆனைக்கோட்டை எண்டு மேற்குப் பக்கமாக ஊர்களையும் நினைத்துக் கொள்ளவேண்டியதுதான். உண்மையை சொன்னால் வெளிக்கிடேக்கை சிலவேளை எங்களுக்கே தெரியாது நாங்கள் எங்கை போப்போறம் எண்டு ! இந்த இலட்சணத்திலை போற இடத்தை வீட்டை எப்பிடி சொல்லிப்போட்டு போறது. ஆக மிஞ்சி ஏதோ சொல்லிப்போட்டு போகோணும் மாதிரி மனசு குறுகுறுத்தால் நான் ஒருக்கா உதிலை போட்டுவாறன் எண்டிட்டு போறது. அந்த ”உதிலை”  எதிலை எண்டு எவருக்கும் தெரியாது.

எப்பவும் வீட்டாலை வெளிக்கிடேக்கை பின்னாலை கரியரிலை ஒரு கொப்பி இருக்கும். அது வீட்டுக் காரரை ஏமாத்த இல்லை. கோகெத யன்னே எண்டு கழுத்தறுக்கும் சந்தியிலை நிக்கிறவங்களை ஏமாத்த. கொப்பியோட வெளிக்கிடுறதாலை வீட்டையும் அதுகள் நினைச்சுக் கொள்ளுறது பெடி ஏதோ கிளாசுக்குதான் போகுதெண்டு. ஆனா ஏழு மணிக்கு ஊரடங்கெண்டா ஏழரைபோலதான் வீட்டை வந்து சேருற பெடி கிளாஸ்தான் போனதெண்டு நம்புறதுக்கு எங்கடை வீட்டுக்காரர் ஒண்டும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. எண்டாலும் கேட்க பயம்.



ஒரு நாலு மணிபோல வெளிக்கிட்டால் பெடி சந்திரன் அண்ணையின்ர படத்துக்குதான் போகும் எண்டு பிரண்ஸ்க்கு தெரியும் ஆனா வீட்டை தெரியாது. பாம்பின் கால் பாம்புதானே அறியும்.

வெளிக்கிட்டாப் பிறகுதான் அப்பா கேட்பார் உவன் எங்கை போறான்?
விடைசொல்ல அம்மா என்ன கடவுளா என்ன! எண்டாலும் என்னத்தை சொல்ல. ஏதோ கிளாஸாம்... நான் சொல்லாத ஒண்டை அம்மா சொல்லிவைக்கும். 

போன பெடி சிலவேளையளிலை வெள்ளனவே வந்திடும். வந்து சைக்கிளை உள்ளு்கை ஏற்றி விட்டுவிட்டு படுத்திட்டுது எண்டா ஆள் திரும்ப வெளியிலை போகாதெண்டு அர்ததம். சைக்கிளை வெளியிலை விட்டு பூட்டிப் போட்டு திறப்பை மேசையிலை வைத்தா பெடி திரும்ப போகப் போகுது ஆனா கொஞ்ச நேரம் கழித்து எண்டு அர்த்தம். சைக்கிளை பூட்டாம உள்ளுக்கை விட்டா விரைவிலை திரும்ப வெளியிலை போகப்போகுது எண்டு அர்த்தம். பூட்டாம சைக்கில் தெவிலை நிண்டா பெடிக்கு கதைக்க பேச நேரமில்லை உடனடியா திரும்ப வெளியே எங்கையோ போகப்போகுது எண்டு அர்த்தம். 

பெடியன் லேட்டா வந்தாலேட்டாகும் ஒவ்வொரு மணித்துளிக்கும் பேச்சு நடக்கும். வேறை யாருக்கு பெடியனின்ர அம்மாவுக்கு தான். ஆனா பெடியன் வீட்ட வந்ததும் பாருங்கோ எல்லாம் கப் சிப். ஒரு கதையில்லை. இந்த வீட்டிலையா இவ்வளவு நேரம் ஏச்சும் பேச்சும் நடந்தது எண்டு பக்கத்து வீட்டுக்காரருக்கே பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

ஒருநாள் இப்பிடித்தான். வெளியிலை போட்டு சைக்கிள் காத்துப்போனதாலை கடையிலை வல்கனைஸ் பண்ண கொடுத்திட்டு இன்னொரு பெடியனிண்டை சைக்கிளிலை ஏறி வீட்டை வெள்ளண வந்திட்டன். நான் வந்ததை ஒருத்தரும் காணேல்லை. வாசலிலை சைக்கிளும் இல்லை. நேரமோ ஆறரையாகுது. அம்மா குசினிக்கை ஏதோ புறுபுறுத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தது.

உந்தக் குறுக்கால போவான் (வேற யார் அது நான்தான்) எங்கை போய்த் துலைஞ்சானோ தெரியாது. எக்கணம் இப்ப தாலியை கட்டுவான் வந்து ( வேறயார் பெடியனின்ர அப்பாதான்) என்னை பேசப் போறான்...தரித்திரம் பிடிப்பான் எங்கை போறதெண்டு சொல்லிப்போட்டுப் போறானே...

வெளியே யாரோ செருமிச் சத்தம் கேட்க புறுபுறுப்பு நின்று வெளியே வந்து பார்த்தது அம்மா.

எட தம்பி எப்படா வந்தனி?

நான் எங்கை போனனான்? இங்கைதானே நிற்கிறன். 

பொறடா மோனை தேத்தண்ணி போட்டனான். ஆறிப் போச்சு . சூடாக்கிக் கொண்டு வாறன்.

அடுப்படியுக்கை பூந்தது அம்மா.

அப்பாவிகள் எப்போதும் பயங்கர வாதிகளை ஆதரிக்கிறார்கள்.







Thursday, May 7, 2009

சித்திரா பறுவம்

சித்திரா பறுவம் அம்மா இல்லாதாக்கள் விரதம் பிடிக்கிற நாள். தாயோடு அறுசுவைபோம் எண்டு பாடிவைச்ச உண்மைகளை அம்மாவை இழந்துதான் அறியோணும் எண்டில்லை. அம்மாவை பிரிந்து கொழும்பு வந்த 2000 ஆம் ஆண்டே அது விளங்கியிட்டுது.


வேலைக்கு போற பொம்பிளை எண்டாலும் அம்மா ஒருநாளும் கடைச் சாப்பாடு எடுக்க விட்டதில்லை. சிலவேளை தப்பித் தவறி காலமை பாண் வாங்கினாகூட அதுக்கும் கறி சம்பல் எல்லாம் செய்து வைக்கும்.

காலை 3.30 மணிக்கே குசினிக்குள்ள சத்தம் கேட்க தொடங்கிவிடும். முதல்நாள் காய் பிஞசு செட்டி பிரிட்ஜ்க்கை வைக்கும் இநத காலப் பொம்புளையள் மாதிரி இல்லை அம்மா. காலமை எழும்பித்தான் எல்லாம் பிரஸாக செய்யவேணும் எண்டு நிற்கு்ம். எண்டாலும் சமைச்சு முடிச்சு சாப்பாடு தந்துவிட்டு பள்ளிக் கூடம்போய் படிப்பிச்சிட்டு வாறதெண்டா.... செய்து பார்த்தாதான் தெரியும்.

பள்ளிக்கூடம் விட்டு வந்தாலும் டப்பெண்டு அப்பளம் அல்லது வெங்காயம் பொரித்து தாறதுக்கு ஆளைச் சொல்லித்தான். காலமை சமைச்சது குளிர்ந்து போயிருக்கும் எண்ட கவலையாக்கும் மனிசிக்கு.

நல்ல பழக்கமோ கெட்ட பழக்கமோ எனக்குத தெரியாது சாப்பாட்டோடை செம்பும் தண்ணியும் வேணும் எனக்கு.  சாப்பிட்டு சாப்பிட்டு தண்ணி குடிக்கக் கூடாது எண்டு சொன்னாலும் எனக்கு அது பழகிப்போச்சு. சாப்பாடு கறியெல்லாம் வைச்சுப்போட்டு செம்பு வைக்க மற்ந்தா துலைஞ்சுது. சீமந்த புத்திரன் கத்துற கத்திலை உலகமே நடுங்கிப்போய்விடும். கொழும்புக் கடையளிலை சிலவேளை விக்கல் எடுத்தாலே தண்ணி தர மணித்தியால கணக்கு எடுக்கும். பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போற நேரத்திலை சாப்பாடும் தண்ணியும் மேசைக்கு வரப் பிந்தினால் சரி. நீயும் உன்ரை சாப்பாடும். எனக்கு நேரம்போச்சு எண்டு கோவிச்சு கொண்டு போனால் அம்மா கெஞ்சிக்கொண்டு கேற்று வாசல் வரைக்கும் வரும். பேந்து போனால் போகுது எண்டு சுணங்கித் தந்த சாப்பாட்டை மன்னித்து(?!) வாங்கிச் சாப்பிட்டு விட்டு பேந்து பள்ளிக்கூடம் போறது தான். சிலவேளை கோபம் மிஞ்சி சாப்பிடாமலே போய்விட்டா அண்டைக்கு பட்டினி நான் மட்டுமல்ல அம்மாவும் தான். நானாவது பட்டினி கிடக்கிறதாவது ? கன்ரீனிலை வெட்டிப்போட்டுத்தான் போறது. அம்மாதான் பாவம் நான் வந்து வீட்டை 
சாப்பிடும் மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும்.



இடம்பெயர்ந்து 1995 இலை  போகேக்கை அம்மாவுக்கு மாட்டுக்கொட்டில் ஒன்றுதான் சமையலுக்கு கிடைத்தது. அதுவும் நல்லதண்ணி எடுக்க அரை மைல் நடந்து போகவும் வேணும். பாவம் மனிசி!! கல்வீட்டிலையே பிறந்து வளர்ந்து வீட்டுக் கிணத்து தண்ணி பாவிச்ச மனிசிக்கு இப்பிடியெண்டா.

எது எப்பிடியோ எங்களுக்கு சாப்பாடு நேரத்துக்கு கிடைக்கும்.



வருததம் முத்தி கொழும்பு ஆஸ்பத்திரிக்கு ஆளை கொண்டு வந்தபோது காலைமையிலை இருந்து இரவுவரை எல்லாததுக்கும் நான்தான் ஓடித்திரிந்தது ஆளுக்கு தெரியும்.

மோனை சாப்பிட்டியோடா? 

இல்லையெண்டு உண்மை சொன்னால் பேந்து ஆள் சாப்பிடாது. ஓம் எண்டு பொய்தான் சொனனன்.

நாளைக்கு சித்திரா பறுவம் விரதமாம்.

நான் சாப்பிடாம இருந்தது கேள்விப்பட்டா மனிசி துலைச்சிருக்கும். நல்லவேளை ஆள் இப்ப உயிரோட இல்லை.

நாளைக்கு நான் விரதம்.